தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இளம் வயதில் ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவியேற்ற நபர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இவர், கடந்த 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, தற்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேற்று ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பதவி காலத்தில் சிறப்பாக பணிபுரிய தமிழிசைக்கு வாழ்த்து கூறிய ரோசய்யா, தான் தமிழக ஆளுநராக இருந்த காலத்தில் சென்னையில் தங்கி இருந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார்.
இதனிடையே, தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பவர்கள் பூங்கொத்துகளுக்குப் பதிலாக பள்ளிக் குழந்தைகளுக்கு பயனளிக்கும் நோட்டுகள், டைரிகள், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் போன்றவற்றை பரிசளிக்கலாமே என்று மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.