சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து கீழே விழுந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு எடுத்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக அறிக்கையில் தொண்டர்களுக்கு கேட்டுக் கொண்டுள்ளது.
“கட்சி நிகழ்ச்சிகளில், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது. கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அறியாமையால் சிலர் செய்யும் செயலால் மக்கள் பாதிப்படைவதால் மிகுந்த வேதனை அடைகிறோம்.
தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.