காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் குடியிருப்புக்கு அருகே கிடந்த பீரங்கிக் குண்டை ராணுவ வீரர்கள், பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தர் சப் டிவிஷனில் உள்ள பாலகோட் என்ற கிராமத்தில் சிறிய ரக 120 எம்.எம். பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக ராணுவத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதை அடுத்து அங்கே சென்ற ராணுவ வீரர்கள், பீரங்கி குண்டை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அதன் மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பாக வெடிக்கச் செய்து செயல் இழக்க வைத்துள்ளனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குவதும், காஷ்மீர் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இது போல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய போது, வெடிபொருட்கள் வந்து விழுந்துள்ளதாகக் கூறப் படுகிறது.