தனது பதினாறு வயது படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பெற்றார் விராட் கோலி. அவர் இந்தப் போட்டியில் 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கவனம் பெற்றார்.
இந்தப் போட்டியின் மூலம் கோலி பல்வேறு சாதனைகளைப் புரிந்தார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2,441 ரன் குவித்து முதலிடம் பெற்றார்! 3 வகையான போட்டிகளிலும், அதாவது டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு விராட் கோலி விளையாடத் தொடங்கினார். அதற்கு முன் இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இவரது தலைமையில் இந்திய அணி கோப்பை வென்ற போது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தார்!
தற்போது விராட் கோலியின் பெயர் பலராலும் உச்சரிக்கப் படும் நிலையில், விராட் கோலி தனது 16 வயதில் எடுத்த புகைப்படத்தையும், அண்மையில் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.