சென்னை
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர நான் தயாராக இருக்கிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுளார்.
இதுகுறித்து அவர் ஆங்கில செய்தி சேனலான ‘நியூஸ்எக்ஸ்’க்கு அளித்த சிறப்பு பேட்டி: –
சசிகலாவை அதிமுக., தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்துவது துரதிஷ்டவசமானது. தமிழக மக்கள் நிச்சயம் இதனை ஏற்க மாட்டார்கள். நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது.
எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப் படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்படக் காரணமே அவரைச் சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான். எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டபோது அவருக்கு உரிய பராமரிப்பு கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை.
சரியான நேரத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுக.,வைப் பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன்.