அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கு குறித்த விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய விசாரணையின் போது, அயோத்தி தொடர்பாக 2003ஆம் ஆண்டு தொல்லியல்துறை அளித்த அறிக்கை ஒரு சாதாரண கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அது நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்து அளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்!
பல்வேறு கட்டங்களுக்குப் பின்னர், அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது. தினந்தோறும் விசாரணை நடத்தப் பட்டு, வழக்கு விரைவில் முடித்துவைக்கப் பட வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக உள்ளது. இதற்காக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
வரும் நவம்பர் மாதம் 17ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன் தமது பதவிக் காலத்திலேயே அயோத்தி விஷயத்தில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும் என்று கருதி விசாரணையை தீவிரப் படுத்தி வருகிறார். இல்லாவிட்டால், வேறொரு தலைமை நீதிபதி வந்து அவர் முன்னிலையில் மீண்டும் தொடக்கத்தில் இருந்து இந்த வழக்கு விசாரிக்கப் பட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அயோத்தி வழக்கானது மீண்டும் இழுத்துக் கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது.
எனவே, வரும் அக்டோபம் மாதம் 18ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்து விட வேண்டும் என்று கடந்த செப்.18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரம் இந்த விசாரணைக் காலத்தில், மத்தியஸ்தர் குழு மூலம் மனுதாரர்கள் தங்களுக்குள் பிரச்னையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்கு தடை இல்லை என்றனர் நீதிபதிகள். இருப்பினும் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப் பட்டு, இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய கட்டத்தின் அடியில் கட்டடம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை கூறிய கருத்து குறித்து முஸ்லிம் அமைப்பு தரப்பில் ஆஜரான அரோரா வாதிடுகையில், ‘தொல்லியல் துறை அறிக்கை என்பது வெறும் கருத்துதான். இது அவர்களின் திட்டவட்டமான ஆய்வல்ல. அவ்வாறு அவர்கள் கூறும்போது அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். எனவே இது வெறும் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை நீதிமன்ற சான்றாக கருத முடியாது’’ எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது, கடந்த 2003இல் இந்திய தொல்லியல் துறை அளித்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய கட்டடத்தின் அடியில் மிகப்பெரிய கட்டடம் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததில், இந்த ஆய்வு அறிக்கையை எழுதியவர் குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும், அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் கூறி, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான ராஜீவ் தவான் மன்னிப்பு கோரினார்.
இன்றைய விசாரணையின் போது, நேற்றைய கருத்து குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, தடயங்கள் இருப்பதாக 2003இல் தெரிவித்த அறிக்கை மிக முக்கியமானது.
இது சாதாரணமாக அளிக்கப் பட்ட வெற்று அறிக்கை அல்ல. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப் படி தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சி குறித்த அறிக்கை. எனவே இதனை சாதாரண கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.
அகழாய்வு செய்து அவர்கள் கண்டுபிடித்ததன் அடிப்படையில் நீதிபதிகளுக்கு அவர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். எனவே இது நன்கு ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையாகவே பார்க்க வேண்டும் என்று கூறினர்.
அந்த வகையில், சர்ச்சைக்குரிய கட்டடத்தின் அடியில் பழைமையான ராமஜன்ம பூமி கட்டடம் இருந்ததற்கான தடயங்களை சமர்ப்பித்த தொல்லியல் குழு அறிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது.