ஐ.நா.,வில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா மீது குற்றம்சாட்டிப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை இந்தியாவின் ஜனாதிபதி என தவறாக கூறினார். இது, உலக அளவில் கேலி செய்யப் பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. பொது சபையில் தனது முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். அவரது உரையின் பெரும்பகுதி இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது. அவருக்கென ஒதுக்கப்பட்ட நேரம் என்னவோ 15 முதல் 20 நிமிடங்கள் தான். ஆனால், காஷ்மீர், இந்தியா என்ற எண்ணங்கள் அவரது மூளையை ஆக்கிரமித்து விட்டதால், ஒதுக்கப் பட்ட நேரத்தையும் மீறி, வெகு நேரம் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 74ம் ஆண்டு பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நாட்டின் வளர்ச்சி, உலக அமைதி, பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
பின்னர் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இங்கு நான் பருவநிலை மாற்றம் குறித்தே பேச துவங்குகிறேன். எனக்கு முன் பேசிய தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்துப் பேசினர். ஆனால் அதில் தீவிரத்தன்மை இல்லை என்பதை உணர்கிறேன்.
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. நான் ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை 10 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம். பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள 100 கோடி மரக் கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எனக்கு நண்பர்கள் உள்ளனர். இந்தியா செல்வது எனக்கு பிடிக்கும்.
ஆட்சிக்கு வந்தவுடன் இரு நாடுகளிடையேயான பிரச்னை, வர்த்தகம் குறித்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என இந்தியாவிடம் தெரிவித்தேன். பாகிஸ்தான் தரப்பிலிருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் பலுசிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது.
இந்திய ராணுவம் மீது 20 வயது காஷ்மீர் இளைஞன் தாக்குதல் நடத்தினார். இதற்கு எங்கள் மீது இந்தியா குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என இந்தியாவிடம் கேட்டோம். ஆனால் இதற்கு மாறாக தாக்குதல் நடத்தியது. இதற்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம்… என்று பேசினார்.
முன்னதாக தலைவர்கள் பேசுவதற்கு 15 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதமர் மோடி 15 நிமிடங்களுக்குள் பேசி முடித்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், விதிகளை மீறி தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை பேசினார்.
நீண்ட நேரம் பேசியது மட்டுமல்ல… அவரது உரையின் போது இந்தியப் பிரதமர் மோடி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக இந்திய ஜனாதிபதி மோடி என்றும் தவறாகக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரானில் பேசிய போது, ஜெர்மனி – பிரான்ஸ் எல்லைப் பகுதி எனக் குறிப்பிடுவதற்கு பதில் ஜெர்மனியும் ஜப்பானும் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
1992 ல் தனது பேண்ட் பேக்கட்டில் சோடா பாட்டில் மூடிகளை போட்டுக் கொண்டு, பந்தை தேய் தேய் என்று தேய்த்து சேதப் படுத்தி, முறைகேடான வகையில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் இம்ரான் கான். தற்போது ஒரு நாட்டின் பிரதமராகவும் இருக்கும் அவருக்கு அண்டை நாட்டு தலைவர் வகிக்கும் பதவியை கூட சரியாக சொல்ல தெரியவில்லை என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.