கர்னூலு – பன்னீ (bunny) உற்சவம் இந்த வருடமும் ரத்தத்தில் நனைந்தது… முன்னோர்களின் பரம்பரை வழிபாட்டு வழக்கம் என்று கூறி இந்தக் கொண்டாட்டங்களில் 11 கிராம மக்கள் கம்புகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.
தசரா பண்டிகையான விஜயதசமி அன்று தேவரகட்டு மலை அருகில் நடைபெறும் பன்னீ உத்ஸவம், போர்க்களத்தை நினைவூட்டுவது வழக்கம் . அதேபோல் இந்த விஜயதசமி அன்றும் செவ்வாய்க்கிழமை 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மலை அடிவாரத்தில் கூடி கம்புச் சண்டையில் ஈடுபட்டார்கள் .
இந்தச் சண்டையில் 60 பேருக்கு மேல் காயமடைந்தனர். அதில் நால்வரின் நிலைமை மோசமாக உள்ளது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தேவரகட்டு மலையில் கோயில் கொண்டுள்ள மாலமல்லேஸ்வர ஸ்வாமி கல்யாண உத்ஸவத்தை ஒட்டி கழி யுத்தம் (கம்பு போர்) நிகழ்த்துவது வழக்கம். ஸ்வாமியின் உத்ஸவ விக்ரகத்தைப் பெற்றுக்கொள்வதில் போட்டியிடும் ஒரு பகுதியாக இந்த கம்புச் சண்டை நடத்தப் படுவது வழக்கம்.
கம்பு கழிகளோடும் தீவட்டிகளோடும் நள்ளிரவில் மலைகளின் இடையே தெய்வ விக்ரகங்களோடு கல்யாண உத்ஸவத்திற்கு புறப்படுவார்கள். அசுர விளையாட்டு போல ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு முன்னேறுவார்கள். இந்த விளையாட்டில் மனிதர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுவதும் வழக்கமாகிப் போனது. இது இங்கு சர்வ சாதாரணம்.
இது போல் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள வேண்டாம் என்று போலீசாரும் தன்னார்வத் தொண்டர்களும் எத்தனை எச்சரித்தாலும் இங்குள்ள மக்கள் கேட்பதில்லை. இது எங்கள் பரம்பரை வழக்கம்…விடுவதற்கில்லை என்று கூறி ஒவ்வொரு ஆண்டும் இதே போல் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்.
தசரா என்றாலே கர்னுலு மாவட்ட வாசிகளுக்கு பன்னீ உற்சவமும் கம்புச் சண்டையும்தான் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்குமேல் பங்கேற்றதாகத் தெரிகிறது. விஜயதசமியை ஒட்டி கல்யாண உத்ஸவத்திற்குப் பிறகு கம்புச் சண்டை தீவிரமாக நடந்தது.
11 கிராம மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அடித்துக் கொண்டார்கள். தேவரகட்டு பன்னீ உத்ஸவம் இவ்விதமாக, கம்புச்சண்டை என்றே மாறிவிட்டது. தசரா வருகிறது என்றாலே போதும் இந்த கழி யுத்தம் தான் நினைவுக்கு வரும்! கடந்த சில வருடங்களாக இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீசார் முயற்சித்து வந்தாலும் அது எடுபடவில்லை. இதில் மது அருந்திவிட்டு போதையில் மோதும் வழக்கமும் தீவிரமாக உள்ளது.
செவ்வாயன்று நடந்த பன்னீ உற்சவத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் பங்கு கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் எஸ்பி பகீரப்பா போன்றோர் அருகில் இருந்து நிலைமையை கண்காணித்தனர். சிசிடிவி கேமரா, ட்ரோன் கேமரா பால்கன் வாகனங்களோடு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
ஆயிரம் பேருக்கு மேல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை, ப்ளெக்ஸ் பேனர்கள், டாக்குமென்டரிகள் மூலம் செய்திருந்தார்கள். ஆனாலும், மக்கள் அதையெல்லாம் கேட்பதில்லை. தங்கள் பாரம்பரிய நிகழ்ச்சி இது என்று வழக்கம் போல் இந்த ஆண்டும் கம்புகளால் தாக்கி மண்டையை உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டார்கள்!