சீனா அதிபர் ஸி ஜின்பிங் நாளை தமிழகம் வருகிறார்.
சீன அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு! அதே போல், மாமல்லபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் அடுத்த 2 தினங்களுக்கு காட்சிகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் நாளையும் நாளை மறுநாளும் பிரதமர் மோடியுடன் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜின்பிங் வருகையால் சென்னை, மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
சீன அதிபர் வருகை குறித்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாதுகாப்பு ஒத்திகை நடத்தப் பட்டது. சீன அதிபர் வருகையைட்டி, பாதுகாப்பு ஒத்திகை சென்னையில் நடத்தப் பட்டது.
சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ள நிலையில் உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக சென்னை கொளத்தூரில் 45,000 மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடத்தப் பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையையொட்டி வரும் 11,12ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
புதிய சுற்றுலா நகரமாக உருமாறியிருக்கிறது மாமல்லபுரம். இந்த நிலையில், புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராம மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
மாமல்லபுரம் நகரத்தில் 800 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்பரப்பில் பாதுகாப்புக்கு 2 போர்க்கப்பல்கள் ரோந்து செல்கின்றன.
திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ரயில் நிலையங்களிலேயே திபெத்தியர்கள் வந்தால் தடுத்து நிறுத்தவும் போலீசார் ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.