ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உடைய வழக்கில் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு பணிக்குழு தலைவர்களின் தேசிய மாநாடு தில்லியில் நடைபெற்று வருகிறது.
அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதில் அதிகபட்சமாக 33 பேர் தமிழகத்தில் இருந்தும், 19 பேர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும், 17 பேர் கேரளாவில் இருந்தும், தெலங்கானாவில் இருந்து 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படும் நபரின் வீடியோக்களை பார்த்துதான் தாங்கள் பயங்கரவாத இயக்கத்தில் சேர தூண்டப்பட்டதாக தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட சிலர் ஒப்புக் கொண்டுள்ளதாக அலோக் மிட்டல் கூறியுள்ளார்.