மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, மிசா காலத்தில் கைதானார் என்று ஒரு டிவி., பேட்டியில் பொன்முடி முன்னர் வைக்கப் பட்ட வாதம், இப்போது பலரை மிசாவுக்குள் இழுத்திருக்கிறது.
1975ம் ஆண்டும் தொடர்ந்து, மறு வருடமும் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, பலர் சிறை சென்றனர். அப்படி திமுக., தலைவராகவும் முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால் அவர் மிசா.,வின் கீழ் அடைக்கப் படவில்லை, கசமுசா செய்ததால் கைதாகி அடைக்கப் பட்டார் என்று சமூகத் தளங்களில் பல்வேறு அனுமானங்கள் உலா வருகின்றன.
குறிப்பாக, ஷா கமிஷன் அறிக்கையின் படி மிசா கைதிகளின் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவர் மிசா காலத்தில் அடைக்கப் பட்டார், ஆனால் மிசாவின் கீழ் அடைக்கப் படவில்லை என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இப்போது மிசாவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது உண்மை என்று பொன்ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது! இது பாஜக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது தாக்கப்பட்டது உண்மை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக வெளியான செய்தி தவறானது என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.
அக்.18 வெள்ளிக்கிழமை அன்று, திருவரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே காந்தி ஜெயந்தி 150-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்!
இந்த யாத்திரை ஸ்ரீரங்கம் வழியாக திருவானைக்காவல் நாலுகால் மண்டபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜீவ் கொலை குறித்த சீமான் பேச்சு ஏற்கமுடியாதது; என் மண்ணில் இந்த நாட்டின் தலைவராக இருந்த ஒருவரை படுகொலை செய்ததை ஒருகாலும் ஏற்க முடியாது; இதை வைத்து பெருமைப்பட சிலர் இருப்பது கண்டிக்கத்தக்கது…
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் அவரை தாக்க முயன்ற போது நான் குறுக்கே பாய்ந்து தடுத்ததால் என் காது கேட்கும் திறனை இழந்தேன் என்று ஆற்காடு வீராசாமி பேசக் கேட்டிருக்கிறேன்.
ஸ்டாலின் சிறை சென்றது உண்மை தாக்கப்பட்டது உண்மை! ஆனால் சிட்டிபாபு கொலைக்கு காரணமானவர்களை தூக்கிக் கொண்டு திரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது! .. என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள வீடியோ பதிவினை பகிர்வு செய்து, பாஜக.,வினர் இப்போது செய்திப் பிழை குறித்து விமர்சிக்கின்றனர்.