சென்னை:
கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர் தாம்தாம் கட்சியைக் காப்பாற்றுவதாகப் பேசுகிறார்; அதிமுக.,வைக் கைப்பற்ற சதி நடக்கிறது என்று அதிமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அதிமுக.,வைக் காப்பாற்ற நினைப்பவர் எவர் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், பொதுச்செயலாளரே முதலமைச்சரகாவும் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
முன்னதாக சனிக்கிழமை தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழாவின்போது பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், “இப்போதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனாலும் உயிரையும் துச்சமென மதித்து அதிமுகவை கட்டிக்காக்கப் பாடுபட்டு வருகிறோம். இப்போது சிலர் கட்சியினரை குழப்ப முயற்சி செய்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து அதிமுகவைக் காப்பாற்றி, தமிழகத்தில் நல்லாட்சி தொடர பாடுபடுவோம். ஜெ., ஜா. என அதிமுகவில் இருந்த இரண்டு அணிகளையும் இணைத்து, முடங்கிப் போன இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எடுத்ததும் நடராஜன் தான்.” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதில் விளக்கம் அளிக்கும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை இன்று சந்தித்த அதிமுக., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “பொங்கல் விழாவின்போது, அதிமுக-வுக்கு சின்னம் வாங்கியதே நடராஜன் தான் என்பது போல் திவாகரன் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. திவாகரன், நடராஜன் ஆகியோர் கட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அதிமுக தொண்டர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கட்சி பொதுச் செயலாளர் கண்டித்து கட்சியை வழிநடத்த வேண்டும்.
திவாகரன் தற்போது கட்சியில் இல்லை. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தலைமைக்கு விசுவாசம் இல்லாதவர். கட்சியில் இல்லாத ஒருவர் இயக்கத்தை காப்பாற்றுவேன் என்றெல்லாம் பேசி அதிகார மையத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது எனது கருத்து மட்டுமல்ல. ஒட்டுமொத்த அதிமுகவினரின் கருத்து. திவாகரன் தன்னை கட்சியில் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு சிலர் தொந்தரவு கொடுக்கிறார்கள். எனவே இதுபோன்ற பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனிடையே அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது,
எம்.ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன். அவர் கருத்து சொல்ல உரிமை இல்லை என கே.பி முனுசாமி கூறியது கண்டிக்கதக்கது.அதிமுக வளர வேண்டும் நினைப்பவ்ர்கள் யாராக இருந்தாலும் கருத்து சொல்லலாம்.ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தது திவாகரனும அவரை சார்ந்தவர்கள் தான். மருத்துவமனையில் ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா குடும்பத்தினர் உதவி உள்ளனர். திவாகரன் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.
கே.பி.முனுசாமி விலை போய்விட்டார். அவர் பின்னால் இருந்து யாரோ செய்ல்படுகிறார்கள். அவர் மனதில் வேறு எண்ணம் கொண்டு இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது.அவரை யாரோ இயக்குகிறார்கள். அ.தி.மு.கவில் அவர் இருந்து இருந்தால் இவ்வாறு அவர் கூறி இருக்கமாட்டார். சசிகலா பொதுக்குழுவில் ஒரு மனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். யார் பொதுச்செயலாளரோ அவரே முதல் அமைச்சர் என எம்ஜிஆர் கூறி இருக்கிறார் என்று கூறினார்.
அதிமுக.,வில் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல், இந்நாள் அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.