பொதுமக்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பீகார் மாநில கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்காய விலையால் ஒரு முறை பாஜக., ஆட்சியே போனது தில்லியில்! அதன் பின்னர் தில்லியில் பாஜக.,வால் கால் வைக்க முடியவில்லை!
இப்போதும் வெங்காயத்துக்கு ஏக கிராக்கி. வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று கூறும் அளவுக்கு வெங்காயமும் உருளைக்கிழங்கும் வட இந்தியர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்தவை.
சில நாட்களாக வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ ரூ.100ஐக் கடந்து விற்பனையாகிறது. இதனால், பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெங்காயத்தின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து, அரசு மூலம் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்கப் பட்டு வருகிறது.
பீகார் மாநில அரசின் உதவியுடன் செயல்பட்டு வரும் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில், வெங்காயம் கிலோவுக்கு ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே பொது மக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர். இங்கெல்லாம் வெங்காயமும் விரைவில் விற்றுத் தீர்கிறது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவுதான் வெங்காயம் தரப்படுகிறது.
எனவே வெங்காயம் கிடைக்காதவர்கள் ஊழியர்களைத் தாக்கும் சம்பவங்களும் அரங்கிறுகின்றன. எனவே, அவர்களிடம் இருந்து தங்கள் தலைகளைப் பாதுகாக்க, கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.