கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்கக் காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூர் கண்ணப்பன் லே – அவுட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உறவினர்களான ஆனந்தகுமார் ( 40), அருக்காணி(45) சிவகாமி (50), ஓவியம்மாள் (50) ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. காய்கறி மண்டிகளில் கூலி வேலை பார்க்கும் இந்த நான்கு குடும்பத்தினரும், ஹாலோ பிளாக் கற்களில் சுவர் எழுப்பி, அதன் மீது ஓடு வேய்ந்து அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.
முன்தினம் இரவு முதலே கன மழை பெய்ததால் உறவினர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர். இவர்களுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த திலகவதி (38) என்பவரும் இவர்களது வீட்டில் படுத்திருந்தார். இவர்கள் மொத்தம் 17 பேர் நான்கு வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தனர்.
இவர்களது வீடுகளின் பின்புறம், ‘சக்கரவர்த்தி துகில் மாளிகை’ ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் (66) என்பவருக்குச் சொந்தமான 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒன்று இருந்தது.
கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், நேற்று அதிகாலை 5.15க்கு அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், நான்கு வீடுகளின் மீதும் கற்கள் விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதை அடுத்து, வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த உரிமையாளர் சிவசுப்ரமணியன்மீது விபத்து ஏற்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தை அடுத்து தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.