ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தில்லியில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
தில்லியின் ராணி ஜான்சி சாலை, ஆனஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தன.
இந்தத் தீவிபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் 43 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தீவிபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் தரப்படவில்லை. அதனால் மீட்புப் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது… என்றார். இருப்பினும், போலீசார் கூறுகையில், அந்தக் கட்டடத்தில் 59 பேர் இருந்ததாகக் கூறினர்.
தீவிபத்தில் படுகாயமடைந்து தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் ஆர்எம்எல் மருத்துவமனை, ஹர்திங்கே மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், நாங்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். அவர்கள் புகையை சுவாசித்ததால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றார். தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது என்றாலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.