பாகிஸ்தானை. தலைமையிடமாக கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு, டிச.,22ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் பேச இருக்கும் பிரதமர் மோடியை குறி வைத்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
தில்லியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி, வரும் டிச.,22ம் தேதி டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரசாரம் நடத்தவுள்ளார்.
இதில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜ., அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் பாஜ., கூட்டணி முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் மோடியை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிரதமரின் பாதுகாப்பிற்காக நீல புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை முழுமையாக செயல்படுத்துமாறு, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் தில்லி காவல்துறைக்கு உளவுத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டன.
இது குறித்து உளவுத்துறை சார்பில் கூறப்படுவதாவது: மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பெரிய கூட்டமும், அதிகமான ஊடகங்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டத்தில் தாக்குதல் நடத்த, பாகிஸ்தானை. தலைமையிடமாக கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது செயற்பாட்டாளர்கள், அணி திரட்டப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி தீர்ப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பன போன்ற, மோடியின் நடவடிக்கையால் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த அக்., மாதம் மோடி மீது தாக்குதல் தொடுக்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததாக உளவுத்துறை ஏற்கனவே கூறியிருந்தது.
அதேபோல், காஷ்மீரில் 370வது பிரிவை ரத்து செய்ததற்காக பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர்களை குறிவைத்து தாக்கப்படும் என செப்., மாதம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ஷம்ஷே வாணி எழுதியதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.