தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் தொடங்கியது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வார்டு ஒதுக்கீட்டில் அதிருப்தி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவகாரங்களால் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி கடந்த 16ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
காலை 7 முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபடவுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 452 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.