சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை மறுநாள் மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது!
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டலபூஜை காலம் நேற்று மதியம் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டு சீசனை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சீசன் சுமுகமாக இருந்தது. வருமானம் 160 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்தை விட 40 சதவிகிதம் அதிகம்!
நிறைவாக நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப் பட்டு சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரு மண்டல பூஜையை நடத்தி தீபாராதனை செய்வித்தார்.
ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி மூன்று நாட்களுக்கு மகரவிளக்கு பூஜைக்காக ஆயத்தங்கள் நடைபெறும்.
தொடர்ந்து நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறுகிறது.