கள்ளழகர் திரைப்படம் உருவாகும்போது, அதில் நான் இரண்டு பாடல்கள் எழுதினேன்.சின்னவயசுல என்று தொடங்கும் பாடலை கான உலகின் கந்தர்வன் திரு. ஜேசுதாஸ் பாடினார் . அப்போது அண்ணன் இயக்குனர் பாரதி அவர்களோடு அப்பாடல் பதிவிற்காக
அவரது இல்லத்திற்குப் போயிருந்தேன்.
அங்கே பாடல் பதிவிற்கு முன்னே ,தேனீர் பருகிக் கொண்டே சிறு அரட்டைப் பேச்சு.அப்போது ஜேசுதாஸ் ஒரு விஷயம் சொன்னார்.தமிழ் நாட்டுக்காரர்கள் உணர்ச்சி கரமானவர்கள்.பாடல் நன்றாகப் பாடினால் ஆகா ஓகோ என்று வெளிப்படையாகப் பாராட்டுவார்கள் .
வெறுப்பையும் வெளிப்படையாகவே காட்டிவிடுவார்கள்.மலையாளிகள் அப்படியில்லை.நாம் என்னதான் பாடினாலும் அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.பாடகன் தன் வித்தக விசாலத்தை மொத்தமாக காட்டட்டுமே அதையும் நாம் அளந்து பார்ப்போமே என்பது மாதிரி. .
மனிதனுக்கு மனிதன் ரசனை வேறுபடும்.
ஒருவன் எதை ரசிப்பான் எப்படி ரசிப்பான் என்று நமக்கென்ன தெரியும் ?
நான் சாஸ்திரத்தை அனுசரித்து என் மனோதர்மத்தை அனுசரித்து மட்டுமே
பாடமுடியும்.பாராட்டுவதும் தூற்றுவதும்
அவரர் இஷ்டம் .அதைப் பற்றி நான் பொருட்படுத்துவதில்லை என்றார்.
அன்றவர் சொன்ன கருத்தில் எனக்கு முழுதும் உடன்பாடு உண்டு. வாசக ரசனை இப்படித்தான் இருக்கிறது என்று
தேர்ந்து தெளிந்தது மாதிரி பத்திரிகை அதிபர்கள் தன் தரத்திலிருந்து இறங்கி
இறங்கி இன்னும் இறங்கிக் கொண்டே
இருக்கிறார்கள.
சினிமா, கவிதை, பாட்டு அரசியல் எல்லாவற்றிலும் இறங்குமுகம்தான் தெரிகிறது.
இறங்க இறங்க இன்னும் சில படிகள்
இருந்து கொண்டே இருக்கும். ஏறிப் போனாலும் அப்படித்தான்.மேலும் ஏற சில படியிருக்கும்.
ஒவ்வொரும் கலைஞனும் தன் படிநிலையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.மிகவும் மேலே போனால் பார்வையாளன் பார்வையிலிருந்தே மறைந்துவிடும் ஆபத்து உண்டு.
மிகவும் கீழே இறங்கினால் அண்ணாந்து
பார்த்தவனும் குனிந்து பார்ப்பான். தெருப் பொறுக்கிகளின் ரசனைக்காக தெருவில் விழ முடியுமா ?
கூளப்பநாயக்கனைப் பாடிய புலவன்
அவனை அந்தப்புர வீரனாக பாடிவிட்டு,
அந்தப் புறம் போய் அவன் தன் குஞ்சை
தானே பார்க்க முடியாத தொப்பைத் தவளை என்று சிரித்தானாம்.
அப்படித்தான் வெகுஜன ரசனைக்காக
என்று கீழே இறங்கியவர்களும் அப்படியே
கீழ்மைகளின் ரசனையைப் பழிக்கிறார்கள். அதே நேரம் இன்னும் இன்னும் என்று இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
கூடி நிற்கும் கூட்டம் குதுகலம் அடைவதற்காக ,எடப்பாடி,அமித்ஷா, பிரதமர் மோடி எல்லோரையும் ஒருமையில் பேசி, அவர்களின் சோலியை முடிக்க சாய்புகளை ஏவும் அய்யா நெல்லைக் கண்ணன் பேச்சு குனிந்து பார்க்கும் பள்ளத்திற்கு இறங்கிவிட்டது.
வாய் தந்தன பேசுதியோ மறை தந்த
நாவால் என்ற கம்பன் வரி நினைவுவந்து
போனது எனக்கு.தரமான அரசியலை, சினிமாவை, சொற்பொழிவை
கவிதைகளை , பாடல்களை இன்றும்
எதிர்பார்ப்போர் உண்டு. காலத்தோடு
ஒட்டி ஒழுகுவதாய் நினைத்துக் கொண்டு
கயமைகளோடு ஒட்டி ஒழுகுவது ஜன ரஞ்சகமல்ல.நிஜத்தில் ஜனவிரோதமும் துரோகமும் ஆகும்.
- கவிஞர் நந்தலாலா