இன்று காலை தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளிலேயே முத்தாய்ப்பாக தனது வழக்கமான எதிர்க்கட்சித் தலைவரின் பணியைத் திறம்பட ஆற்றி வரலாற்றில் இடம் பிடித்த மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இதை அடுத்து திமுக.,வினர் அவையில் இருந்து வழக்கம் போல் வெளிநடப்பு செய்தனர்.
2020ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், ஆளுநர் உரையின் போது அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழில் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமது உரையைத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ பேச முயன்றார். ஆனால் ஸ்டாலினின் அந்த அநாகரிகச் செயலுக்கும் மதிப்பளித்து பதில் அளித்த ஆளுநர் புரோஹித், பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க மட்டுமே சட்டசபையை பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறினார்.
இவ்வாறு கூறியதைத் தாங்கமாட்டாத சுயமரியாதை மிக்க திமுக.,வினர் தொடர்ந்து தாங்கள் முன்னமேயே திட்டமிட்டபடி, வழக்கம் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக.,வினர் அவையில் இருந்து வெளியேறிய பின்னர் தமது உரையைத் தொடர்ந்த ஆளுநர் புரோஹித், தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்றும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்…
- ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
- ரூ.563.30 கோடி மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு அளித்துள்ளது
- பரம்பிக்குளம் – ஆழியாறு பிரச்னையை தீர்க்க தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து பேசியது பாராட்டுக்குரியது.
- தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாற்று படுகையில் கர்நாடகா அணை அமைக்க முடியாது.
- கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
- முதல்வரின் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி.
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவிற்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிட பணிகள் விரைவில் முடிவடையும்.
- சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
- புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் அரசின் நலத்திட்டப் பணிகளை மக்கள் எளிதில் பெற முடியும் …
என்று உரையாற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.