ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை வெளியானது தர்பார் திரைப்படம். ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான இந்தப் படம், 2 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், ஆந்திராவில் ஏழரை கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாம். இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் 40 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்.
இது தவிர, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், லண்டன் உள்ளிட்ட வெளி நாடுகளின் வசூல் 15 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கின்றனர். எனவே தர்பாரின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை எட்டும் என்று கூறுகின்றனர்.