சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த ஜன.9ம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது தர்பார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி காந்த் மும்பை காவல் ஆணையர் வேடத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திய சசிகலாவின் சிறைக்காட்சி குறித்து வசனங்கள் வைக்கப் பட்டிருப்பதாகக் கூறி, ஏ.ஆர். முருகதாஸ்க்கு மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
தொடர்ந்து லைகா நிறுவனம் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அல்லது வசனங்களை நீக்குவதாக உறுதி கூறியது.
இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரரான மரிய மைக்கேல் என்பவர், தூத்துக்குடி 3வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினி காந்த், ஹிப்பி தலை, தாடி ஆகியவற்றுடன் நடித்துள்ளார். நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று வசனம் பேசுகிறார். இது போலீஸ், ராணுவத்தினரை கொச்சைப் படுத்துவது போல் உள்ளது. எனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், முருகதாஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ள நீதிமன்றம் வரும் 21ம் தேதி இது குறித்து விசாரிக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.