கோழிக்கோடு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் சட்டமாக்கப் பட்டுவிட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநில அரசுக்கு பிரச்னைகள் ஏற்படும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில் சிபல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைச் சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது. அப்படிக் கூறுவது சாத்தியமற்றது. அவ்வாறு சொல்வதும், அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல்தான்.
நீங்கள் ஒரு சட்டத்தை எதிர்த்து, மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். அந்த சட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனச் சொல்வது மாநில அரசுக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்கும்.
மாநில அரசுக்கு பல விதங்களில் கஷ்டங்களை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிகவும் கடினமே.
குடியுரிமை சட்ட விவகாரம் என்பது, நாட்டு மக்கள் சிலருக்கும், ஆட்சியாளருக்கும் இடையே நடக்கும் போராட்டம்.
நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையுடன் அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதை உள்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் கவனித்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும் வளர்ச்சியை விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் மோடி சாதித்தது என்னவென கேள்வி எழுகிறது என்றார் அவர்.