நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலம்னு பீத்திக்கொள்கிற கேரளத்துக்காறனுங்க சரியான கூமுட்டைங்க… அறிவுகெட்டவனுங்க… என்று வசவு மழை பொழிகிறார்கள் மாநிலத்தின் எல்லைப் பகுதி மக்கள்.
இவ்வளவு ஏன் ஏச்சும் பேச்சும் என்று அவர்களிடம் கேட்டால்… அவர்கள் சொல்லும் பதிலுக்கான சம்பவம் இன்று காலையும் நடந்தது.
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடி வழியாக இன்று அதிகாலை ஒரு மூடிய லாரி வந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் அந்த லாரியை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால், காவலர்களை மீறி, அவர்கள் பிடியில் இருந்து தப்புவது போல் அந்த லாரி வேகமாகச் சென்றுள்ளது.
இதை அடுத்து உஷாரான காவல்துறையினர், உடனே தகவல் கொடுக்கவே, செங்கோட்டை காவல் துறையினர் அந்த குறிப்பிட்ட லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியை சோதனையிட்ட போது, அது மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி என்பதும், கழிவுகளை தமிழகத்தில் கொட்டிவிட்டுச் செல்வதற்காக வந்ததும் தெரியவந்தது.
இதை அடுத்து, அந்த லாரியை கேரளத்துக்கே ஓட்டிச் செல்லுமாறு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் வற்புறுத்ததால், லாரியை கேரளத்தை நோக்கி திருப்பிய ஓட்டுநர், புளியறை சோதனைச் சாவடிகடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை மீது ஏறிச் செல்லக்கூடிய எஸ் வளைவு பகுதியில் லாரியை அப்படியே விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளார்.
தமிழகத்துக்குள் இப்படி இறைச்சிக் கழிவு லாரிகளை அனுமதித்து அனுப்பிக் கொண்டிருக்கும் கேரள மாநில போலீஸார், அதே கழிவுகள் தங்கள் பகுதிக்குள் வரும் போது அதனைத் தடுத்து அதிக அபராதம் அல்லது தண்டனை தருவர் என்ற அச்சத்தால் இவ்வாறு லாரியைதமிழக எல்லையிலேயே ஓட்டுநர் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப் படுகிறது.
தமிழக எல்லைக்குள் இது போன்று அடிக்கடி இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள், காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப் படும். பின்னர் திருப்பி அனுப்பப் படும். இது போல் தமிழகத்தில் இருந்து மாடுகள், ஆடுகளை இறைச்சிக்காகக் கொண்டு சென்று, கழிவுகளை மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்து கொட்டி விட்டுச் செல்லும் அயோக்கியத் தனத்தை கேரளத்து வியாபாரிகள் செய்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தமிழக பகுதிகள் நன்கு விளையக்கூடிய, விளைச்சல் நிலங்கள். இங்கே இது போன்று கழிவுகளைக் கொட்டி, நீராதாரங்களைக் கெடுத்து, மண்ணையும் மலடாக்கும் அறிவுகெட்டத் தனத்தை கேரள வியாபாரிகள் செய்து வருவது இப்பகுதி மக்களை கோபம்கொள்ள வைத்துள்ளது.
இதைவிட முக்கியமான அம்சம் தமிழகத்தை சேர்ந்த சில பணத்தாசை பிடித்த அரக்கர்கள் தங்கள் மாநிலத்தை, மண்ணை மலடாக்கும் செயலில் ஈடுபடுவது தான்! ஆற்றின் மணலை அள்ளி ஆறுகளை சாகடித்துக் கொண்டிருக்கும் அயோக்கியர்களை போல தமிழகத்தைச் சேர்ந்த சில பணத்தாசை வியாபாரிகள் தங்கள் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளில் இந்த கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தங்கள் மாநிலத்திலேயே கொட்டி விடுவது தான்! இந்த விவகாரத்திலும் விருதுநகர் பதிவு எண் கொண்ட லாரி தான் சிக்கியுள்ளது. போலீசார் என்னதான் கவனத்துடன் செயல்பட்டாலும் இதுபோன்ற நபர்கள் முழுவதுமாக தண்டிக்கப்பட்டால் ஒழிய கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகளை கொட்டுவது நிற்காது!
நூறு சதவீத எழுத்தறிவு பெற்று என்ன பயன்? அடிப்படை மனிதப் பண்பு இல்லாமல், தாங்கள் மட்டும் அனைத்தையும் நுகர்ந்து கொண்டு, அதன் பாதிப்பு அடுத்தவருக்கு வந்து விடட்டும் என்று எண்ணும் அரக்கத்தனமான புத்தி அல்லவா இவர்களிடம் குடி கொண்டிருக்கிறது?!