எங்களுக்கு கண்டண்ட் தரும் கண்டெய்னரே…
தமிழகத்தின் நிரந்தர எதிர்க்கட்சித் தலைவரே!
மார்ச் 1இல் பிறந்த ஏப்ரல் 1னே…
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
இன்று சமூகத் தளங்களில் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து அல்லோலகல்லோலப் படுகிறது. மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளை #HBDMKStalin என்ற ஹேஷ்டேக்கில் கட்சியினர் ஒருபுறம் பகிர்ந்து கொண்டிருக்க… மறுபுறத்தில், இலவுகாத்த கிளி என்றும் #Hbd_இலவுகாத்தகிளி ஹேஷ் டேக் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Expectation#HBDMKStalin
Reality#HBD_இலவுகாத்தகிளி pic.twitter.com/Qd29ZDcCtg
— 🚩 நந்தா 🚩🕉️🔱📿🌷 (@Nanda_Twtz) March 1, 2020
மார்ச் 1 – திமுக.,தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள். வழக்கமாக உத்ஸாகத்துடன் கொண்டாடுவார்கள் கழகத் தொண்டர்கள். இந்த வருடம் கழக பொதுச் செயலர் க.அன்பழகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை மட்டுப் படுத்திக் கொள்வதாகவும், தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வந்து மாலை போட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இருந்த போதிலும், இன்று திமுக., தொண்டர்கள் சமூகத் தளங்களில் வாழ்த்து சொல்வதிலும், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதிலும் பிஸியாகிப் போயிருக்கிறார்கள். சிலர் வானளாவப் புகழ்ந்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அதே நேரம், தலைவரின் பிறந்த நாளில் இதை கட்டாயம் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று தங்கள் உள்ளக்குமுறல்களையும் வெளிப்படுத்துகிறார்கள் திமுக.,வின் மூத்த தலைவர்கள் சிலர்.
தனது தந்தையின் தயவில் கட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனாலேயே தொண்டர்களால் வளர்ந்த கட்சியில் மற்றவர்களுக்கு தலைமைக்கான செல்வாக்கு இல்லை. கட்சிக்காக உழைத்தவர்கள் இன்று அடையாளம் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஸ்டாலின் கட்சிக்குள் வந்ததே, ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி என்ற கதையாக, பிறக்கும் போதே சில்வர் ஸ்பூன் ரேஞ்சில் பிறந்து வந்தவர். வளர்ந்த தலைவர் என்பதை விட, கருணாநிதியால், வளர்க்கப்பட்ட தலைவர்! தொண்டர்களிடம் செல்வாக்குடன் கிளைத்தெழுந்த தலைவர் இல்லை, தொண்டர்களிடம் திணிக்கப்பட்ட தலைவர்.
தற்போதும் ஸ்டாலின் தனக்கென்று தனி பரிவாரம் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த பரிவாரமோ, ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிடுவார் என்றுதான் சுத்திக் இருக்கிறது. அதிமுக.,வை வளர்த்தெடுத்த ஜெயலலிதா போல் தனித்துவ சர்வாதிகாரியாக இருக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கலாம். அதனால்தான் அவர் தன்னை சர்வாதிகாரி என்று கூறிக் கொண்டார். ஆனால், திமுக.,வோ தொண்டர்களால் வளர்ந்த கட்சி. தொண்டர்களையும் இரண்டாம் மட்டத் தலைவர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி நடத்த முடியாது.
கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன், எ.வ.வேலு, செல்வகணபதி, சேகர்பாபு என்றெல்லாம் அதிமுக.,வில் இருந்து வந்த நபர்களையே நம்பிக் கொண்டிருக்கிறார். கரூர் செந்தில்பாலாஜி மீது அவரே வழக்கு போட்டுவிட்டு, இப்போது கட்சியில் இணைந்ததால் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், கட்சிக்காக உழைத்தவர்களைத் தள்ளி வைத்தாலும், வேண்டுமென்றே ஒதுக்கிவைத்தாலும் அவர்கள் கட்சித் தலைமையை மதிக்கிறார்கள்.
திருச்சி சிவாவுக்குக் கூட அவரது தகுதிக்குரிய அளவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாஞ்சில் சம்பத் எனவெல்லாம் பேசினார். இன்று அவரை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறீர்கள். தஞ்சாவூரில் பழனி மாணிக்கம் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவருக்கு உரிய அங்கீகாரம் இல்லை.
துரை முருகனுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள். ஆனாலும் ஏதோ அனுசரித்துப் போகிறீர்கள். அன்பில் பொய்யாமொழிக்கு அள்ளிக் கொடுத்தீர்கள்.!பழனிவேல்ராஜன், ஆர்எஸ்.பாரதி, அன்பில் பொய்யாமொழி, உங்க மருமகன் இவர்கள் தானே இன்று கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர்! திமுக.,வுக்கு பொதுக்குழுவே வேண்டாம்; நீங்களே முடிவு எடுக்கலாம்! படுத்துக் கொண்டிருக்கும் பேராசிரியருக்குக் கூட எதுவும் தெரியாது, நீங்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் அவர் பெயரில் அறிக்கை விட்டு, அசிங்கப் படுத்திக் கொண்டீர்கள்.
திமுக.,வின் செல்வாக்கு, கட்சிக்கென ஒரு கட்டமைப்பு உள்ளது; திமுக.,வின் பலமே தொண்டர் பலம்தான். அதனை அவமதிப்பு செய்வது போல் உங்கள் நடவடிக்கை இருப்பதால் தான், இன்று இலவு காத்த கிளி என்ற கேலிக்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள்.
முன்பெல்லாம் கருணாநிதி இருந்த போது, தன்னுடன் யார் காரில் வரவேண்டும், அவர்களுடன் என்ன பேசிக் கொண்டே செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்து அதன்படி, கட்சியை நடத்தினார். மதுரைமுத்து, முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன், வைகோ போன்றவர்களை காரில் ஏற்றிக் கொண்டு வருவார். அவர்களுடன் அப்போதே கட்சி விவாதம் நடக்கும். ஆனால் நீங்களோ, கட்சித் தாவல்களில் கரை கண்ட சேகர்பாபு, செல்வகணபதி, கேகேஎஸ்எஸ்ஆர் என்று சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் மீதெல்லாம் நீங்கள் தான் ஊழல் வழக்குகளைப் போட்டீர்கள். இன்று அவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!
இன்னும் சொல்லப் போனால், சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கை செல்வகணபதி மீது போட்டவரும் நீங்கள்தான். அதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் பின்னர் மனம் திரும்பி உங்கள் காலடியில் விழுந்தார். அவரை மாநிலங்களவைக்கு கொண்டுவந்தீர்கள்.
ஈரோடு முத்துசாமிக்கு உரிய மரியாதை ஏன் கொடுக்கவில்லை? கேகேஎஸ்எஸ்ஆர் தடுத்தார் அதனால்! பரம்பரை திமுக.,க்காரனை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி மாறி வந்தவர்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தால், கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. பொங்கலூர் பழனிசாமியை ஒதுக்கிவிட்டீர்கள்! சுகவனத்தை ஒதுக்கிவிட்டீர்கள்!
நாமக்கல் மாவட்டச் செயலராக ஒருவரைப் போட்டிருக்கிறீர்கள். காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்து எல்லா சேவகமும் செய்துவிட்டார். இன்று அவர் எங்கே இருக்கிறார் தெரியவில்லை. டி.ஆர்.பாலு இப்போது வேண்டப் படாதவர் ஆகிவிட்டார். அவர் இடத்தில் நேருவைக் கொண்டு வந்தீர்கள்.
ஆரிய பகையை வென்று வா எங்கள் திராவிட அசூரனே 🔥🔥🔥🔥#HBDMKStalin pic.twitter.com/4Acf70dP20
— River🔥 (@RiverFiree) March 1, 2020
மதுரை நம் எல்லை, நெல்லை நமக்குத் தொல்லை என்று கூறிக் கொண்டிருந்த கருணாநிதி ஏன் அப்படிச் சொன்னார்? நெல்லை மாவட்டத்தில் இருந்து கருப்பசாமி பாண்டியன் வந்தார். மதிக்கவில்லை. ஓடியே போய்விட்டார்! அதே நெல்லை மாவட்டத்துக்காரர் கேஎஸ் ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தீர்கள்?! கனிமொழி- அதிபன்போஸ் பிரச்னை தொடங்கி, ஈழப் பிரச்னை, ஐ.நா.,வுக்கு எடுத்துச் செல்வது, அங்கே பேசுவது என எல்லாவற்றிலும் முன்னணியில் நின்றார். ஆனால் அவரையோ நீங்கள் மனிதனாகக் கூட நினைப்பதில்லை!
இலவு காத்த கிளி என்று உங்களை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இலவு காத்த கிளி! அவர்கள் பொறுமை காத்த பசுக்கள்! – என்று பொருமித் தீர்க்கிறார்கள் திமுக., இரண்டாம் மட்டத் தலைவர்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் காதுகளை நிறையச் செய்து வாழ்த்தொலி மயக்கத்தில் திளைத்திருக்கும் போது, இதையும் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்!