இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு கொரொனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டு உறுதி செய்யப் பட்ட தில்லியைச் சேர்ந்த நபரின் உறவினர்கள் 6 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
முன்னதாக தில்லியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டது. இந்நிலையில் உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கத்தின் அறிகுறி தென்பட்டதால், கொரோனா வைரஸ் சோதனைக்கு அவர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில், அவர்கள் 6 பேருக்கு கொரொனா வைரஸ் பாஸிட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனும் இதனை உறுதிப் படுத்தினார். தில்லி நபரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் 25 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பதாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது… என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தில்லி வந்த இத்தாலி பயணிகள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. வைரஸ் அறிகுறி அதிகம் உள்ள 14 பேருக்கு அடுத்தக்கட்ட சோதனை மேற்கொள்ளப் படுகிறது.