கொரோனா விளைவு காரணமாக – மார்ச் 15 ஆம் தேதி அமித் ஷா கலந்துகொள்ள இருந்த, ’ஹைதராபாத் பேரணி ரத்து செய்யப்படுகிறது. அவர் இந்த மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் தெலங்காணாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்!
தெலங்காணா மாநிலத்தின் ஹைதராபாத்தில் மார்ச் 15 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வதாக இருந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணி தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பொதுக் கூட்டம், பேரணி என்று பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற நிலையைத் தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் கூடி, உடல் ரீதியான தொடர்பு ஏற்படுவதைக் குறைத்து, நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, இந்த முறை ஹோலி கொண்டாட்டக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தன் பங்குக்கு அமித் ஷாவும் பொதுக்கூட்ட பேரணிகளைத் தவிர்த்து வருகிறார். தற்போது ஒத்திவைக்கப்பட்ட ஹைதராபாத் பேரணியின் அடுத்த கட்ட நாள், அட்டவணையை சரியான நேரத்தில் கட்சி வெளியிடும் என்று கூறப் படுகிறது.