தெலங்காணா சட்டசபையில் தனது முதல் கூட்டத் தொடரில் பங்கேற்றார் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர் திருக்குறளை முத்தாய்ப்பாகச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.
ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் சட்டமன்றத் தொடரில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், ‘உறு பசியும் ஓவாப் பிணியும்..’ எனத் தொடங்கும் திருக்குறளைச் சொல்லி, உரையை நிறைவு செய்தார்.
தெலங்காணா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், அந்த மாநில சட்டமன்றத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்திருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவரை முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் சட்டமன்றத்தில் தமது முதல் உரையைத் தொடங்கிய ஆளுநர் தமிழிசை, அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் தொடங்கிய அவர், ஆங்கிலத்தில் தொடர்ந்து உரையாற்றினார்! இறுதியில் தமது உரையை முடிக்கும் முன்னர், ஒரு திருக்குறளைச் சொன்னார்.
”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு” என்ற திருக்குறளைக் கூறினார். தொடர்ந்து, ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு என்பது இதன்பொருளென்பதை ஆங்கிலத்தில் கூறி உரையை நிறைவு செய்தார்.