கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வருகிறது, உயிர்க்கொல்லி தொற்றுநோய் ‘கொரோனா வைரஸ்’க்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கெனவே லண்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அண்மையில்தான் சோபி, பிரிட்டன் சென்று திரும்பியிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை சோதித்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சோபிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, அவர் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறார். அவர் நன்றாக இருக்கிறார். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருக்கு கொரோனா அறிகுறி லேசாகத்தான் உள்ளது .. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.