இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் என, கொரோனா வைரஸ் காற்றின் வழியே பரவும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் வழியே பரவுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் அதிவேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா மிக அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உலகில் மக்கள் நடமாட்டத்தையே தடுத்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது கொரோனா வைரஸ் பரவல் அச்சம்.
இந்நிலையில், காற்றின் மூலமும் கொரோனா பரவும் என்ற தகவல்களால் மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். இந்த வைரஸ் வெறுமனே காற்று மூலமே பரவும் என செய்திகள் வெளியாகி, இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தக் கருத்துகளுக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ அருகில் நிற்பவர்களுக்கு காற்றின் ஊடாக சளி, எச்சில் துளிகள் எடுத்துச் செல்லப்பட்டு, அடுத்தவர்களுக்கு பரவும். ஆனால், வெறுமனே காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவாது. காற்றின் மூலம் பரவியதாக இதுவரை தகவல் இல்லை. காற்றின் மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.