வழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.
கொரோனா அச்சத்தால் சோர்ந்து போ வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் உற்சாகத்துக்காக பிரதமர் மோடி சிலவற்றைச் செய்யச் சொல்ல, அதனையே சிலர் கேலிப் பொருளாக்கி அரசியல் லாபம் பார்க்க தொடங்கிவிட்டனர். முதலில் கைகளைத் தட்டச் சொன்னார். பின்னர் விளக்கேற்றச் சொன்னார். இனி எழுந்து நிற்கச் சொல்வார். பின் தீ மிதிக்கச் சொல்வார் என்றெல்லாம் கேலியும் கிண்டலும் சமூகத் தளங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று தனது கவனத்துக்கு வந்ததாகக் கூறி, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரு பதிவுகளைச் செய்திருந்தார்.
மோடிக்கு @narendramodi மரியாதை செலுத்த 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்று ஒரு சிலர் பிரச்சாரம் செய்வதாக என் பார்வைக்கு வந்தது. என் மீது அவதூறு பரப்பி சர்ச்சையை உருவாக்கும் செயலாகவே முதலில் இதை நான் பார்க்கிறேன் ; அவர்களின் நல்லெண்ணமாக கூட இது இருக்கலாம்.
அவ்வளவு அன்பும் மரியாதையும் மோடி @narendramodi மீது இருக்குமானால், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும் வரை ஒரு ஏழை குடும்பத்தின் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள். அதை விட பெரிய மரியாதை எனக்கு வேறு ஏதும் இல்லை : நரேந்திர மோடி
அடுத்து, கடந்த இரு தினங்களாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி இடையிலான பேச்சு மற்றும் மருந்து ஏற்றுமதி விவகாரத்தில் அரசியல் உருவாக்கப்பட்டு அதனை ஊடகங்கள் வழியே பரப்பி வருகின்றனர் சிலர். இதனை இருநாட்டு உறவுகளின் ராஜாங்க விஷயம் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், மனம்போன போக்கில் சிலர் செய்து வரும் பொய்யான தகவல்களால் நாட்டின் மதிப்பும் மரியாதையும் குலைகிறது என்று பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்ப அனுமதி அளித்ததால், மோடி மாமனிதர் என இன்று டிரம்ப் புகழ்ந்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஏற்கெனவே கொள்முதல் ஆணை வழங்கிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு விடுவிக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் நட்பு நாடுகளுக்கு உதவும் வகையில் மாத்திரை ஏற்றுமதிக்கு இருந்த தடை பகுதியளவு விலக்கிக் கொள்ளப் பட்டதாக இந்தியா அறிவித்தது. இதை அடுத்து செய்தியாளர் களிடம் பேசிய டிரம்ப், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2 கோடியே 90 லட்சம் மாத்திரைகள் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார். மோடி மாமனிதர் என்றும், உண்மையிலேயே நல்லவர் எனவும் டிரம்ப் புகழ்ந்தார்.
குஜராத்தின் 3 மருந்து தயாரிப்புத் தொழிற்சாலைகளில் இருந்து அமெரிக்காவுக்கு மாத்திரைகள் அனுப்பப்படுகின்றன.
இதே போல் இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவின் அடிப்படையில் பிரேசில் அதிபர் இன்று கூறிய சொற்கள் பலராலும் பெருமிதத்துடன் பகிரப் பட்டன.
ஹைட்ராக்ஸிகுளோரோக்யுன் மாத்திரைகளை அனுப்பி உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரியுள்ள பிரேசில் அதிபர், ராமாயணத்தில் அனுமன் மலையைத் தூக்கி வந்த கதையை மேற்கோள் காட்டியுள்ளார்.
பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனாரோ சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பிரேசிலுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமாயணத்தில் லட்சுமணனின் உயிரைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த கதையையும், கண்பார்வை அற்றவருக்கு இயேசு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்த கதையையும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இந்தியாவும் பிரேசிலும் இணைந்து கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .