spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு!

- Advertisement -

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கப் படுகிறது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் படுவதால், பிற மாநிலத்தின் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி , பருப்பு. எண்ணை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!

கட்டிடத் தொழிலாளர்களுக்கும், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும். ரேசன் அட்டை தாரர் களுக்கு ரேசன் பொருட்கள், இலவசமாக வழங்கப் படும், ரூபாய் 1000 இரண்டாம் கட்டமாக வழங்கப்படும். காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம். மே மாத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். – என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

உலக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப் படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர தமிழக அரசால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கும்பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் ஏற்பாடுகள், மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளதன் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய சுகாதாரத்துறை நடவடிக்கைகள், ராப்பிட் டெஸ்ட் எனப்படும் விரைவுப் பரிசோதனை கருவிகளை எந்த பகுதிகளில் விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை அடுத்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை 13.4.2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த 24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர்
மத்திய அரசு அதை 15.4.2020 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள்
காணொலிக் காட்சி மூலமாக 11.4.2020 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நான்
எடுத்துரைத்தேன். மேலும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும், மற்ற
முதலமைச்சர்களும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின்
பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11.4.2020 அன்று
நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு
144ன் படியும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

 ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
 கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
 பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு,
மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து,
 தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

 மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள்
மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து
வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு
ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

  • மு. பழனிசாமி (தமிழ்நாடு முதலமைச்சர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe