E பாஸ் குளறுபடிகளை அதிகாரிகள் சரி செய்வேண்டும்.. என்ற கோரிக்கை இப்போது பலமாக எழுந்து வருகிறது.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நபர்களுக்கு E-பாஸ் என்ற முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்யாமல் தங்களது மாவட்டத்திற்கு சுதந்திரமாக வந்து செல்கின்றனர். மாவட்ட எல்லையிலும் கூட எந்தவித மருத்துவப் பரிசோதனையும் செய்வது கிடையாது.
ஒருவேளை அவர்களுக்கு நோய்த் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கு பரவும் அபாய நிலை ஏற்படுகிறது. ஆகவே இ பாஸ் கொடுப்பதற்கு முன்பு இ பாஸ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்; தோற்று இல்லாமல் அல்லது அதற்கான அறிகுறிகள் இல்லை என்றால் மட்டுமே இ-பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. குறைந்த பட்சம், காய்ச்சல் சளி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களையாவது அனுமதித்து இபாஸ் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு இபாஸ் விண்ணப்பிப்பவர்களுக்கு உள்ளூர் சுகாதாரத்துறை அலுவலர்கள் யாரேனும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இபாஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சமூகப் பரவல் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருக்கும் நிலையில், எவ்வித சோதனையும் இல்லாமல் சென்னையில் இருந்து இபாஸ் பெறுபவர்கள் மூலம் உள் மாவட்டங்களுக்கு மேலும் தொற்று பரவக் கூடும் என்ற அச்சம் உள் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் தென்காசி மாவட்டம் இலத்தூர் வந்து இருக்றார் என்றும், அவருடன் கூடவே உறவினர்கள் 8 பேர் பயணம் செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையான எந்த அனுமதியும் இல்லை, மருத்துவ பரிசோதனையும் செய்யப்படவில்லை! இப்படி இருக்க அவர் எப்படி சொந்த ஊருக்கு வந்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும், இது குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும. கூறப்படுகிறது.
தற்போது ஆன்லைனில் இபாஸ் விண்ணப்பிப்பவர்களுக்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகள், முக்கியப் பணியாளர்கள் எவரேனும் சான்றளிக்க வேண்டும் என்றும், எல்லோரும் இபாஸ் கொடுத்து மீண்டும் தமிழகம் முழுதும் கொரோனா பரவுவதற்கு இபாஸ் வழங்கும் நடைமுறையே காரணமாகிவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர் பொதுமக்கள்.
தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்ட காவல்நிலையம் முன்மாதிரியாக செயல்படுகிறது. அண்மையில் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கே நடைப்பயணமாகவே வந்தவர்களை மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி அவர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப் பட்ட பின்னரே அவர்கள் அனுமதிகப் பட்டனர்.
அதனாலேயே தென்காசி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களிடம் இருந்து தொற்று ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் மருத்துவ பரிசோதனை செய்தபின் வரும் நபர்களை அனுமதித்தால் முழுவதுமாக நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே, கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியானதின் எதிரொலியாக, விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு சந்தையில் இருந்து வருபவர்களை கண்டறியும் பணி தீவிரம் அடைந்துள்ளது. விழுப்புரத்தில், ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப் பட்டிருக்கிறது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்றும், கோயம்பேடு சந்தை மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள மாநில அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், வெளிமாவட்டங்கள் செல்ல tnepass.tnega.org மூலம் பாஸ் பெறலாம் என்றும் மாநகராட்சி ஆணையர் கூறினார்.
வீட்டுவேலைப் பணியாளர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் பாஸ் வாங்கிக் கொடுக்கலாம்; தனிக்கடைகள் பட்டியலில் டீக்கடைகள், பேன்சிக் கடைகள் ஆகியவை இடம்பெறாது என்றும் மாநகராட்சி ஆணையர் இன்று தகவல் தெரிவித்தார்.