Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் பக்தர்கள் இன்றி… நேரலையில்… மீனாட்சி திருக்கல்யாணம்!

பக்தர்கள் இன்றி… நேரலையில்… மீனாட்சி திருக்கல்யாணம்!

madurai meenakshi thirukkalyanam
madurai meenakshi thirukkalyanam

மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

மதுரை சித்திரை திருவிழா ரத்தானதால் இன்று மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் நடைபெற்றது. அதை வீட்டில் இருந்தே பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருதன. அதன்படி, வெப்தளம் முகவரி, பேஸ்புக் லைவ் என ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

மதுரை சித்திரை திருவிழா முறைப்படி தொடங்கி இருந்தால் சனிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்திருக்கும். ஆனால் விழா ரத்தானதால் வெறுமனே ஒப்புக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. வழக்கம்போலான அபிஷேக அலங்காரத்துடன், சிவாச்சாரியார்கள் மந்திர ஒலி முழங்க, திருக்கல்யாணம் மட்டும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மதுரையில், மீனாட்சி அம்மன், பாண்டிய மன்னனுக்கு மகளாகப் பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவதேவர்களை போரில் வென்று சிவபெருமானையே திருமணம் செய்து கொண்டார். அந்த மதுரை அரசிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். ஊரும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர். நம்மைத் தேடி வரும் இறைவனைக் காண மாசி வீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இது தவிர மதுரையை ஆளும் மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டும் நன்னாளும் இந்தத் திருவிழாவில் மிக விஷேடம்.

ஆனால் இந்த முறை கொரோனா என்ற கொடிய அரக்கனால் தேவ காரியங்கள் பெரிதாக தடைபட்டன. எனவே முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை மட்டும் திங்கட் கிழமை இன்று பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டு வேத ஒலி முழங்க நடத்தி வைத்தனர்.

திங்கள் கிழமை இன்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிராகாரத்தில் உத்ஸவ மூர்த்தி அமைந்துள்ள சேர்த்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த வைபவத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளமான www.maduraimeenakshi. org ல் நேரடியாக வெப்காஸ்டிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்கள் பலர் ஒரே நேரத்தில் இணையதளத்தில் அலைமோதியதால் அதனைக் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், பேஸ்புக் லைவ் மூலம் பெரும்பாலானவர்கள் இந்த வைபவத்தைக் கண்டு களித்தனர்.

கடந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தில் செய்த மலர் அலங்காரம் போன்று, இம்முறையும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தின் பேஸ்புக் வீடியோ இங்கே..

செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version