மதுக்கடை திரப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுக்கடைக்கு வருவோர் கண்டிப்பாக தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இதை அடுத்து நாளை மதுக்கடைகள் திறப்பில் எந்தப் பிரச்னையும் இராது என்று கூறப் பட்டுள்லது.
தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதால், சென்னையைத் தவிர மற்ற இடங்களில் கடைகள் திறக்கப் படும் என்று கூறப் படுகிறது . எனவே, தனிநபர் இடைவெளி, சமூக விலகல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து மதுக்கடைகள் இயங்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்லுபடி செய்தது. மேலும் ஆன்லைனில் மதுவை விற்பனை செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.
முன்னதாக, தமிழகத்தில் டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ ஆறு அடி இடைவெளியுடன் தனி நபர் விலகலை பின்பற்றவோ முடியாது எனவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றங்களும், விபத்துக்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மதுபான விற்பனை அத்தியாவசிய நடவடிக்கை அல்ல என்றும் கூறியிருந்தார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமான விசாரணையின் போது தங்களை மனுதாரராக சேர்க்கக்கோரி மேலும் மூவர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
டாஸ்மாக் கடைகள் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட்களாக மாறிவிடும் என்றும், மதுப்பழக்கம் உடையவர்கள் விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் அடிமையாக்கிவிடும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பிற்பகலுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிற்பகலில் அரசு அளித்த பதிலை அடுத்து, இவ்வாறு நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்தனர்.