சென்னையில் மே 8 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னைவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலில் தப்ளிக் இ ஜமாத்தைத் தொடர்ந்து தற்போது கோயம்பேடு ஹாட் ஸ்பாட் ஆகியுள்ளது. இதை அடுத்து, கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் கலைந்து சென்ற ஏராளமான தொழிலாளிகள் மூலம் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்த வடபழனி, அரும்பாக்கம், கோடம்பாக்கம், எம்.எம்.டி.காலனி ஆகிய பகுதிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பதிவான பெரும்பாலான நோய்த்தொற்று எண்ணிக்கை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் பாதிப்பு அதிகரித்தாலும், உயிரிழப்பு குறைவாக உள்ளது என்று கூறினார். சென்னைவாசிகளுக்கு இத்தகவல் ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது. ஆனால் இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சிகரமாக சென்னையில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பாதிக்கப்பட்ட மண்டலமாக ஆரம்பத்தில் ராயபுரம் இருந்தது. தற்போது கோயம்பேட்டை அடுத்த கோடம்பாக்கம் மண்டலம் அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.
சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த 56 வயது நபர், கோயம்பேடு சென்று வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல் இதே பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்த 76 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் இன்று உயிரிழந்துள்ளார். அடுத்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி, திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் இன்று உயிரிழந்தார்.
கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மட்டுமல்லாமல் வட மாவட்டங்கள் முழுவதும் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவது உறுதியாகி வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மூலம் தொற்று ஏற்பட்டவர்களில் இருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்ததால் தமிழ்நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 41 ஆக அதிகரித்துள்ளது.
- சதானந்தன்