ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்க காலத்தில் ஊழியர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும், அவர்களுக்கு ஊதியத்தை குறைக்கக் கூடாது, முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்பன போன்ற உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, அரசின் உத்தரவுக்கு எதிராக நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 25 முதல் மே 14 வரை மட்டுமே இந்த உத்தரவு அமலில் இருந்தது என்றும், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள 54 நாள்களுக்கு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஊழியர்கள் முழு ஊதியம் பெற்றிருந்தாலும் அதனை நிறுவனத்துக்கு திரும்ப கொடுக்க அரசு உத்தரவிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.