திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது கொடுக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், ஆந்திர மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாம் ஏன் திருப்பதி கோவிலுக்குச் செல்வதில்லை? என்று சிவக்குமார் நீட்டி முழக்கி விளக்கம் அளித்தபோது, அவர் கூறியது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கல்லூரிக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சிவக்குமார், இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, தான் திருப்பதி கோவிலுக்கு செல்வதில்லை என்றும் அங்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களை மதிக்காத தேவஸ்தானம், கொஞ்சும் குமரியுடன் இரவெல்லாம் கூத்தடித்து விட்டு காலையில் குளிக்காமல் சாமி கும்பிடச் செல்லும் செல்வந்தர்களுக்கு கும்பத்துடன் மரியாதை அளிப்பதை தான் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்தார்!
அவரது பேச்சு அப்போதே சமூகத் தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு கண்டனங்கள் வலுத்தன. ஆனாலும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்போ வருத்தமோ எதுவும் தெரிவிக்கவில்லை.
திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்!
தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் அளித்தது.
தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. இதையடுத்து ஆந்திர போலீசார் நடிகர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே கருத்தரங்கில் தஞ்சாவூர் கோவிலில் தீண்டமை இருப்பதாக நடிகர் சிவக்குமார் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.