லடாக்கில் சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நடந்த இந்த கூட்டத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். லடாக்கின் கிழக்கு பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது
லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்திய சீன ராணுவத்தினரிடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனா தரப்பில் 5 வீரர்கள் மரணமடைந்ததாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது
இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதைஅடுத்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் உள்ளிட்ட சில பகுதிகளி\ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.