முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் ஆக.31 திங்கள் கிழமை இன்று மாலை காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்த போதும், கடந்த சில நாட்களாக கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தேசியத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் நிறைவு. இந்தியாவுக்கு மகத்தான சேவை செய்தார். தேசம் தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துள்ளது… என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவர் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு மூத்த அரசியல்வாதியை இழந்துள்ளது. அவரது கடுமையான உழைப்பு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்தார்… என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தமது இரங்கல் செய்தியில்… நாட்டின் வளர்ச்சியில் அழியாத முத்திரை பதித்துள்ளார். அனுபவத்தில் அறிஞரான அவர், உயர்ந்த அரசியல்வாதி. அரசியல் எல்லையை தாண்டி, சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் போற்றப்பட்டார்… என்று குறிப்பிட்டு, தாம் முதல் முதலில் தில்லியில் 2014இல் தேர்தலில் வென்று பிரதமராக பதவிப் பொறுப்பேற்ற போது, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு பெரிதும் பயன்பட்டன என்பது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
அரசியலில் நீண்ட நாட்கள் இருந்த பிரணாப் முகர்ஜி, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தவர். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். வெளிப்படையானவர். குடியரசுத் தலைவர் மாளிகையை சாமான்ய மக்களும் எளிதில் அணுகும் வகையில் மாற்றினார். கற்பித்தல், கலாசாரம், அறிவியல் கற்றல் மற்றும் இலக்கிய மையமாக அதனை மாற்றினார். முக்கிய கொள்கை முடிவுகளில், அவரது புத்திசாலித்தனமான ஆலோசனைகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. 2014ல் தில்லி எனக்கு புதிது. முதல்நாள் முதல், பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்களை பெற்றேன். அவருடனான உரையாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். … என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
தலைவர்களின் டிவிட்டர் பதிவுகள்…