Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 17. தாய்நாட்டை வணங்கு! வந்தேமாதரம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 17. தாய்நாட்டை வணங்கு! வந்தேமாதரம்!

daily one veda vakyam 4

17. தாய்நாட்டை வணங்கு! வந்தேமாதரம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“உபசர்ப மாதரம் பூமிம்”
ருக்வேதம் 

“பிறப்பளித்த தாய் நாட்டிற்கு சேவை செய்!”

மாதரம் பூமிம்” என்ற சொல் இந்த ருக் வேத மந்திரத்தில் உள்ளது. பூமியை அம்மா என்றழைக்கும் பண்பாடு வேத கலாச்சாரத்தில் இருந்து வந்த சிறந்த எண்ணம்.

நமோ மாத்ர்யை ப்ருதிவ்யை நமோ மாத்ர்யை   ப்ருதிவ்யா” என்ற யஜுர் வேதம் “இயற்கை அன்னைக்கு நமஸ்காரம்” என்று உரைக்கிறது.

மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ருதிவ்யா” என்பது அதர்வண வேதத்திலுள்ள மந்திரம். “அன்னை பூமி. நான் அந்த தாயின் புதல்வன்” என்று பூமிக்கும் நமக்கும் உள்ள உறவை எடுத்தியம்புகிறது.

இந்தக் காரணத்தைக் கொண்டே நம் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியை வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். காலையில் எழுந்தவுடன் தேவதைகளையும் பெற்றோரையும் நினைத்து வணங்கி, பூமியில் கால்வைக்கும் முன்பு பூமாதேவிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் எனும் உயர்ந்த பழக்கம் பாரத தேசத்தில் உள்ளது.

சமுத்ரவஸனே தேவி, பர்வத ஸ்தனமண்டலே, விஷ்ணு பத்னி நமஸ்துப்யம், பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே” என்று கூறி நமஸ்காரம் செய்கிறோம். அதாவது, ஓ  அன்னையே! விஷ்ணுவின் பத்தினியான பூமாதேவி! உன் மீது நான் கால் பதிக்கிறேன். என்னை மன்னித்துவிடு” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

எத்தனை சூட்சுமமான, மிருதுவான கருத்து இதில் உள்ளதோ, கவனியுங்கள். இது வெறும் நம்பிக்கை என்றோ மனப்பிரமை என்றோ எண்ணாமல் இதிலுள்ள கருத்தை ஆழமாக உணர வேண்டும்.

நம் நம்பிக்கைகள் எல்லாம் கூட பிரமைகளாக அன்றி அவற்றை பண்பட்ட எண்ணங்களாக தரிசிக்கத் தெரிய வேண்டும். அதனால்தான் பூமியை ‘அன்னை’ என்று அழைக்கிறோம். 

அதேபோல் நாட்டிய சாஸ்திரத்தில் கூட நடனமாடும் முன்பு நடனமாடுபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முதலில் பூமிக்கு வந்தனம் செய்வார்கள். “பாத காதம் க்ஷமஸ்வமே”  என்பார்கள்.

நாட்டியம் செய்கையில் அவ்வப்போது பாதத்தால் உதைப்பது போன்ற செயல்கள் இருக்கும். தவிர்க்கமுடியாமல் பாதத்தை அழுத்தி வைக்க நேரிடும். ‘என்னை மன்னித்துவிடு’ என்று கூறும் கருத்து இங்கு காணப்படுகிறது.

அம்பாளின் வடிவங்களில் வசுந்தராவும் ஒன்று. தேவி பாகவதத்தில் ஜகன்மாதாவின் ஒரு அம்சமாக பூமாதேவி குறிப்பிடப்படுகிறாள். இதனைக் கொண்டு பூமியை ஒரு கிரகமாகவோ நாம் வசிக்கும் ஒரு இடமாகவோ பார்க்காமல் நம்மை போஷித்து, நம் இருப்புக்கு ஆதாரமான தாய்மை வடிவத்தில் தரிசிக்க வேண்டும் என்ற கருத்தினை தெய்வீக ருஷிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

பிரகிருதியை ஒரு ஜடப் பொருளாகப் பார்க்காமல், சைதன்யத்தோடு கூடிய தெய்வீக வடிவமாக தரிசிப்பது என்பது நம் பண்பட்ட கலாச்சாரம்.

எல்லையற்ற இயற்கை சக்தியில் நாம் ஒரு சிறு துகள் போன்றவர்கள். ஒரு புள்ளியாகத் தோன்றிய மானுட இனம்  இயற்கை சக்தியை ஜடமாகப் பார்த்து, தன் தேவைகளுக்கு பயன்படும் ஒரு பதார்த்தமாக ப்ரக்ருதியை  நினைப்பது வருத்தமளிக்கும் அம்சம். 

பிரக்ருதியை தாய்மை வடிவமாக தரிசித்து அதன் பிள்ளைகள் நாம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ள இத்தகைய பாரதிய சிந்தனையே ‘வந்தே மாதரம்!’ என்ற கூற்றிலும் எதிரொலிக்கிறது.

தாய்நாட்டை வந்தே மாதரம் என்று வணங்கும்போது அது ஒரு இயக்கமாக மாறியது. அது ஒரு மந்திரமானது. இந்திய விடுதலையின் முழக்கமானது. வந்தே மாதரம் என்ற கருத்துக்கு மூலக் கருத்துக்களான ருஷி  வாக்கியங்கள் வேதங்களில் பல இடங்களில் காணப்படுகின்றன.

சிலர் வந்தே மாதரம் என்ற சொல்லைக் கேட்டாலே எரிச்சலடைவர்.  ‘எங்கள் சிந்தனை வேறு… உங்கள் சிந்தனை வேறு’ என்று கூட சொல்வார்கள். ஆனால் ‘மாத்ரு பாவனை‘ என்பது அனைவருக்கும் ஒன்றுதானே! நாம் எவ்வாறு நோக்கினாலும் தாய் நம்மை பிள்ளைகளாகத் தானே பார்க்கிறாள்! அதுபோலத்தான் பூமிக்கும் தாய்மைக்கும் உள்ள உறவைக் காண வேண்டும்

அம்மா என்றால் ஒரு பெண் வடிவம் அல்ல. தாய்மை என்றால் நம்மைப் பெற்று வளர்ப்பவள். நம்மை பாதுகாப்பவள் என்று பொருள் கொள்ள வேண்டும். அதேபோல் நம் இருப்புக்குக் காரணமாகி, நம்மை வளர்த்தும் காத்தும் அரவணைத்தும் வருகின்ற தாய்நாட்டை ‘அம்மா!’ என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? 

‘மாதரம்’ என்பது ஒரு வடிவத்தினை எடுத்துரைப்பது அல்ல.  ஒரு எண்ணத்தின் சொரூபம் என்பதை அறியவேண்டும். அப்படிப்பட்ட ஜெகன்மாதாவாக பூமாதேவியை வணங்குவது என்ற பண்பாட்டைக் கொண்ட பாரத தேசத்தில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version