பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில், தன்னந்தனியாக தாம் நாடு முழுதும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகக் கூறியுள்ளார் 24 வயது இளம்பெண் ஆஷா மால்மியா.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24 வயது தேசிய மலையேற்ற வீராங்கணை, இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக, இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்த சைக்கிள் பயணம் செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் அவரது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசம் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தன்று , தனது பயணத்தைத் தொடங்கிய ஆஷா மால்மியா, குஜராத் மகாராஷ்டிரா ,கோவா, கர்நாடகா, கேரளா, உட்பட ஏழு மாநிலங்களை தனி ஒரு பெண்ணாக யாருடைய துணையும் இன்றி கடந்து, இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தடைந்தார்.
இவரது உயரிய எண்ணத்தை அறிந்து அவரைப் பாராட்டும் விதமாகவும் ஆதரிக்கும் நோக்கிலும், ராஜபாளையம் வருகை தந்த ஆஷா மால்மியாவை, ராஜபாளையம் டி.எஸ்.பி. ப்ரீத்தி வரவேற்று உபசரித்து தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார்.
தான் கடந்து வந்த பாதைகள் குறித்து ஆஷா மால்மியா கூறியதாவது:
எனது நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்தவே இந்த அரிய முயற்சி, நான், கடந்து வந்த பாதைகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் காவல் துறையினர்,
வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் நன்கு வரவேற்று உபசரித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா பாதுகாப்பான நாடு தான் என்பதை உறுதி செய்கிறது. எனது பயணத்தின் இறுதியில், எனது தாய்நாட்டைப் பற்றி தவறாக எண்ணியவர்களுக்கு என் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும் என உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
இவரை வரவேற்று ஆதரவுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த டிஎஸ்பி ப்ரீத்தி வாழ்த்துகள் கூறி வழியனுப்பி வைத்தார். மதுரை வழியாக தமிழகத்தை கடந்து ஓசூர் கர்நாடகா வழியாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆஷாமால்மியா தனது பயணத்தை தொடர்ந்தார்.