சென்னை: தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். ஜெயலலிதா அமைச்சரவையில் தொடங்கி, இதுவரை ஏழு பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ். இது, அவர் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட்.
இது 8 ஆவது பட்ஜெட் என்பதால்தானோ என்னவோ, எட்டாம் எண்ணுக்கே உரிய சங்கடங்களை ஏற்படுத்தி விட்டது என்று காதைக் கடிக்கிறார்கள் சமூக வலைத் தளங்களில்! எட்டாம் எண் என்றாலே படுத்தல் தான் என்று ஒரு வழக்கு உண்டு.
அதற்கு ஏற்ப, இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தனது எட்டாவதுபட்ஜெட்டின் போது, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. வெயில் காலத்திலும் சளித் தொந்தரவு வந்து, பேச விடாமல் செய்தது. தொண்டை கரகரத்து, அடிக்கடி தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொண்டு, ஏற்கெனவே வாசித்த பட்ஜெட் வரிகளை மீண்டும் மீண்டும் தொடங்கி… என்று திக்கித் திணறிவிட்டார் ஓபிஎஸ்.
முற்பகல் 10.30க்கு பட்ஜெட் உரை துவங்கியது. அப்போதிருந்து நின்றுகொண்டு, மதியம் 1.05 வரை இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நின்று கொண்டு, இத்தகைய அசௌகரியமான சூழலிலும் அவர் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.