சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் விமான சேவையைப் பயன்படுத்த முடியும். தமிழகத்தில் விமான சேவைக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக நெய்வேலியில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி, திருச்சி, சென்னை விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம் சென்னை இடையே பசுமை வழிச்சாலை செயல்படுத்தப் படவுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்று பேசினார்.
இது எடப்பாடி பழனிசாமி பேசிய உண்மை நிலை. காரணம், திராவிட இயக்கங்களின் கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் நிலை எப்படி ஆனது என்பது, சென்ற மூன்று தலைமுறையினருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். வளரும் இளம் தலைமுறைக்கு வேண்டுமானால், திராவிட நாடு பேசி பிரிவினை பேசிய தலைவர்களால் நாட்டின் உண்மை நிலை தெரியவராமல் போயிருக்கலாம்.
நம் நாட்டிலேயே, தமிழகம்தான் அதிக சமதள நிலப்பரப்பு கொண்ட மண். இங்கே விவசாயம் தொழில் வளர்ச்சி இரண்டும் நாட்டிலேயே முதலாவதாக இருந்திருக்க வேண்டும். விவசாயத்துக்கான நீர்வளத்தைப் பெருக்க ஆட்சியாளர்கள் தற்காலிக லாபநோக்கற்ற அரசியல் லாபங்களைக் கருதியிராத அணுகுமுறையில் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்ட வசமாக, தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப் படவில்லை. அணைகள் பெரிய அளவில் கட்டப்படவில்லை. இருக்கும் அணைகளையும் சரியாகப் பராமரிக்கவில்லை.
மிகப் பெரும் முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால்தான் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.. ஆனால் இப்போது சென்னையைச் சுற்றி தொடங்கப்பட்டிருக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தனியார்களால் மேற்கொள்ளப்படுபவை. எந்த நேரத்திலும் பணி இழப்பு என்பது சர்வ சாதாரணம். இதுவே பொதுத்துறையின் கீழ் இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் என்றால், தமிழக இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் அதிகம் ஓட வேண்டியதில்லை.
சரி… திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மாபெரும் மத்திய முதலீட்டுத் திட்டங்கள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?
1950 களில் மற்றும் 1960 களில் பெரிய பொதுத்துறை நிறுவனங்களான ICF, NLC, BHEL, MRL மற்றும் MFL ஆகியவை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன. ஆனால், அத்தகைய பெரும் முதலீடுகள் பின்னர் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவே இல்லை. இன்று அத்தகைய பெரும் முதலீடுகள் வேறு பல மாநிலங்களில் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இது மிகவும் சுருங்கிப் போய் விட்டது.
ஏன் இத்தகைய மாபெரும் மத்திய முதலீடுகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இல்லை?
பொதுத் துறை திட்டங்களில் எந்த வகைகளில் எல்லாம் மிகப் பெரும் முதலீடுகளைச் செய்ய முடியும் என்று மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் திட்டங்களே, மத்திய மாநில அரசுகளின் உறவுப் பாலத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகக் காட்ட முடியும்.
தமிழகம் 1950-1960களில் இத்தகைய முதலீடுகளைப் பெற்று பெரும் பயன் அடைந்துள்ளது. ஐசிஎஃப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், பிஎச்இ எல் (திருச்சி, ராணிபேட் மற்றும் புதுக்கோட்டை), கனரக வாகனங்கள் தொழிற்சாலை, சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் இவை எல்லாம் மிகச் சிறந்த உதாரணங்கள்.
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் உள்ளிட்ட மிகப் பெரும் பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள், சிறந்த முதலீடுகளைக் கொணடு, மாநிலத்துக்கு வரி வருவாயைத் தந்ததுடன் வேலை வாய்ப்பையும் அதிக அளவில் அளித்தது. இத்தகைய முதலீடுகள், நீண்ட கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காணாமல் போய்விட்டன. இதற்கு மாறாக, அண்மைக் காலத்தில் என்டிஏஐஐ-ன் பொதுத்துறையிலான முதலீடூகள் வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன…
மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்படூம் மெகா பொதுத் துறை திட்ட முதலீடுகள் என்ன..? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.