சங் பரிவார் அமைப்பில் ஒருவராக பதவியில் இருந்து, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக வலம் வந்த பிரவீண் தொகாடியா, இப்போது ரிட்டயர்ட் லிஸ்டில் சேர்ந்துவிட்டார். அண்மையில் தேர்தல் நடத்தப் பட்டதில் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டுவிட்டார். இதனால் அண்மைக் காலமாக முறைகேடுகளில் சிக்கி அவப்பெயரை சேர்த்து வந்த தொகாடியா, இப்போது அரசியல்வாதி ஆகிவிட்டார்.
நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாட்டு பயணம் கிளம்பிவிட்டார் என்று தொகாடியா ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரவீண் தொகாடியா ஏப்.17 முதல் காலவரை அற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொகாடியா இதுகுறித்து விளக்கியபோது, வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நம் மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. இதை கவனிக்காமல், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் புறப்பட்டுவிட்டார் என்று மோடியை விமர்சித்தார்.
பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.