spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மாறிவிட்ட அரசியல் சூழல்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினால் இனி முதல்வர் ஆகவே முடியாது: அரசியல்...

மாறிவிட்ட அரசியல் சூழல்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினால் இனி முதல்வர் ஆகவே முடியாது: அரசியல் ஞானி விஜயகாந்த்!

- Advertisement -

Vijayakanth latest photoshoot 7 1 e1524574224920

சென்னை: அரசியல் சூழல் மாறிவிட்டது. என்னுடன் கூட்டணி வைத்திருந்தால், நானும் அமைச்சராகி, அவரும் அமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால் இனி ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அவர் என்ன கருணாநிதியா? – இப்படிக் கேள்வி எழுப்பியிருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்!

கடந்த 2011ஆம் ஆண்டு, ஆளும் கட்சியாக இருந்த திமுக.,வை பின்னுக்குத் தள்ளி, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக., கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. திமுக.,வை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் பின் தள்ளியது. யாரும் எதிர்பார்க்காத வகையில், எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் விஜயகாந்த்.

இத்தகைய மாற்றம் நிகழ்ந்தும், விஜயகாந்த் பின்னாளில் ஜெயலலிதாவால் சிக்கி சின்னாபின்னமாகி, கூட்டணியை விட்டு வெளியில் வந்து, தன் கட்சி உறுப்பினர்களே ஒவ்வொருவராக வெளியேறி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி சூடு கண்ட நிலையில், மீண்டும் அதிமுக.,வுடன் கூட்டணி வைக்க இயலாத நிலையில் 2016-ஆம் ஆண்டு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் உள்ள மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் விஜயகாந்த். ஆனால், தேமுதிக.,வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. ஆனால், 2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக., 89 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

ஆனால், அந்தத் தேர்தலின் போது பலவிதமான ஊகங்கள் நிலவின. திமுக.,வுடன் கூட்டணி வைக்க இயலாத நிலையில் அதற்கு முந்தைய தேர்தல் இருந்தது. காரணம், தேமுதிக.,வின் கோயம்பேடு கட்சி அலுவலகம் சாலை விரிவாக்கத்தில் திமுக., அமைச்சரால் இடித்துத் தள்ளப் பட்டது. அந்த கோபத்தால் அரசியல் எழுச்சி கண்ட விஜயகாந்த், பின்னாளில் அதே துரோக திமுக.,வுடன் கூட்டணி வைக்க பலரும் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், 2016ல் சூழல் மாறியது. விஜயகாந்த் திமுக.,வுடன் கூட்டணி பேரத்துக்கு இசைந்தார். திமுக., தேமுதிக., கூட்டணி போட்டியிருந்தால், அக்கூட்டணியே வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், மதிமுக., பொதுச் செயலர் வைகோ, அதிமுக.,வின் அரசியல் விளையாட்டுக்கு ஈடு கொடுத்து, விஜயகாந்த்தை திமுக., கூட்டணியில் சேர விடாமல் தடுத்து, வாக்குகளைச் சிதறடிக்க, மூன்றாவது அணி என மக்கள் நலக் கூட்டணியை அமைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது உண்மைதான் என 2016 தேர்தல் முடிவுகள் சொன்னது.

காரணம் அதிமுக., மீண்டும் வென்றது. திமுக., எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மக்கள் நலக் கூட்டணி ஓர் இடமும் பெற முடியாமல் முடங்கிப் போனது. அன்று முடங்கிய விஜயகாந்தால், மீண்டும் எழ இயலவில்லை. ஆனால், வைகோ., வழக்கம் போல் அடுத்த அரசியல் பணியைப் பார்க்க சிட்டாகப் பறந்தார். மீண்டும் திமுக.,வுடன் தோளுக்குத் தோள் சேர்ந்தார். கருணாநிதியுடன் பாசம் பொங்க தழுவினார்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், காவிரிக்காக நடத்தப் பெறும் அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம், திமுக.,வின் அரசியல் நிலை என பல விஷயங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் விஜயகாந்த்.

அதில், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன். ஆனால் திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே இருந்தது. அதுபோன்ற கூட்டங்களில் நானும் பங்கேற்று ஸ்டாலினின் துதி பாட வேண்டுமா? அதற்கு ஸ்டாலின் என்ன கருணாநிதியா?

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி வைத்து குறைந்தது 60 தொகுதிகளாவது கேட்டுப் பெற வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம். ஆனால் திமுகவோ 40 தொகுதிகள் தரத் தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்னைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்திருந்தால் நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். ஆனால் மாறிவிட்ட அரசியல் சூழலில், இனி ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராகவே முடியாது.

ஸ்டாலினை எனக்கு எப்போதுமே பிடிக்காது. என் மனசாட்சி அவரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மற்றவர்கள் கருணாநிதியை சென்று சந்திப்பதற்கு முன்னரே, நான் சந்திக்க விரும்பினேன். அதற்கு மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து பேசுங்கள் என்று பதில் வந்தது…

மக்கள் நலக் கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது ஸ்டாலினுடன் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை முதல்வராக்கி விடுவார்கள் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்… என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் கூறியபடி, அவரைத்தான் வருங்கால முதல்வர் என மக்கள் நலக் கூட்டணி முன்னிறுத்தியது. ஆனால், 2014ல் கூட்டணியில் இருந்த பாஜக., 2016ல் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்காததால், அவர் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்தார். பின் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்றும், அவரை முதல்வர் ஆக்கியே தீருவது என்று வைகோ மேடைக்கு மேடை முழங்கியதும், வைகோ வீட்டுக்குச் சென்று விஜயகாந்த் உணவருந்தி, தேர்தல் பிரசாரம் செய்ததும், செய்தித் தாள்களுக்கு ஒரு செய்தித் தீனி ஆனதே ஒழிய, வாக்காளர்களிடம் துளியும் சென்று சேரவில்லை.

ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று விஜயகாந்த் இப்படிச் சொன்னாலும், வைகோ., ராசி, நிச்சயம் வேலை செய்யும், ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என்று நெட்டிசன்கள் கொட்டித் தீர்க்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe