கர்நாடக சட்டப் பேரவையில், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலவில்லை என்று கூறி, முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து, குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத காரணத்தால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று எடியூரப்பா கூறினார். பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் எடியூரப்பா.
முன்னதாக, கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக., பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற முடியவில்லை. பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது.
எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கர்நாடகாவில் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எடியூரப்பா பதவி விலகியதால் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா. எடியூரப்பாவிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்ற பிறகு, குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா கூறியதால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
முன்னதாக அவர் இது தொடர்பில் பேசியபோது, என் தலைமையிலான அமைச்சரவை மீது அவை நம்பிக்கை வைத்துள்ளது என்றால் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றார். மேலும், தேர்தலுக்கு முன்னரும் பார்த்தேன். தேர்தல் நேரத்தில் கர்நாடகத்தின் மக்கள் இவ்வளவுக்கு அன்பையும் பாசத்தையும் நம்பிக்கையையும் காட்டியதை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை. கர்நாடக மக்கள் பாஜக.,வுக்காகவே வாக்களித்தனர்.
நான் கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் எனது நன்றியை காணிக்கை ஆக்க விரும்புகிறேன். இந்த மாநிலம் என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அதனால்தான் என் மீது நம்பிக்கை வைத்து 104 இடங்களை சட்டமன்றத்துக்காக அளித்திருக்கிறது…. என்று பேசினார்.