திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலைமைப் பீடமான திருவரங்கம் திருக்கோயில் வளாகத்துக்கு வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலயத்தின் சார்பில் அர்ச்சகர்கள் திலகமிட்டு, மாலை அளித்து மரியாதை செய்தனர். ஸ்ரீரங்கம் கோயில் யானை அணிவித்த மாலையை ஆசையுடன் பெற்றுக் கொண்டார் ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரிய குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்பட மறுப்பதாகக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு, திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முன்னதாக, வரும் வழியில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அவருக்கு கோவிலின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. ஆலய பிரதான அர்ச்சகர் சுந்தர பட்டர் தலைமையில் மு.க.ஸ்டாலினுக்கு அரங்கனின் பிரசாதங்களான மாலை அணிவிக்கப் பட்டது. அப்போது மேள தாளங்கள் முழங்க அவருக்கு திலகமிட்டு வரவேற்பளித்தார் சுந்தர பட்டர். தொடர்ந்து, கோவில் யானை அவருக்கு மாலை அணிவித்தது.
அங்கிருந்து திமுக பிரமுகர்களின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்ற ஸ்டாலின், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் மேட்டூரில் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தமிழக மக்களை பற்றி கவலைப் படாத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறுவதற்கு கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின்.
விரைவில் சந்திக்க உள்ள தேர்தலில் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார் அவர்.
இதனிடையே, மு.க.ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் ஆலய வருகை சமூக வலைத்தளங்களில் பலமாக எதிரொலித்தது. பலரும் அவருக்கு வழங்கப் பட்ட கோவில் மரியாதைகள் குறித்து கருத்துகளை எழுதியிருந்தனர். இருப்பினும் மரபின் படி அவருக்கு ஆலய மரியாதைகள் அளிக்கப் பட்டதை பலரும் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை, சுக்கிர வாரம், சுக்கிரப் ப்ரீதி என பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், சுக்கிர தலமான ஸ்ரீரங்கத்தில் கர்நாடக முதல்வர் ஆகியுள்ள குமாரசாமியைப் போன்று தானும் ஆக வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்ற ஆலய வாசல் வரை வந்து பிரசாதங்களைப் பெற்றுச் சென்றார் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஸ்டாலினின் பகுத்தறிவு அவ்வளவுதான் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் தன்னை ஒரு பொதுவான நபராகக் கருதியிருந்தாரானால், பகுத்தறிவுக் கொள்கை பேசுபவராயிருந்தாலும் எந்த நம்பிக்கையில் குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி அருந்தி, கிறிஸ்துமஸ் கேக் வெட்டிக் கொண்டாடி உண்கிறாரோ அதே நம்பிக்கையில், ஆலயத்துக்குள்ளும் வந்து ஆலய மாலை மரியாதைகளைப் பெற்றிருக்க வேண்டும்! அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!