நாகபுரி: ‘லாகூருக்குள் புகுந்து, எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே, பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார், ஜம்மு-காஷ்மீரில், சில முக்கியப் பணிகளை செய்து முடிக்கவே பா.ஜ.க., சார்பில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. மாநிலத்தில், மூன்று ஆண்டுகளில், 500க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘லாகூருக்குள் எந்த நேரத்திலும், இந்திய ராணுவம் நுழையும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் தயவு இன்றி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க முடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது.
விரைவில் அகண்ட பாரதம் கனவு சாத்தியமாகும். நாகபுரியில் ஒரு வீடு கட்டுவதைப் போல் லாஹூர் அல்லது ராவல் பிண்டியிலும் கட்டுவது சாத்தியமாகும். நமது கடைசி மூச்சு அகண்ட பாரதத்தில் இருக்க கடவுள் நமக்கு அருள் புரியட்டும்.
வருங்கால இந்தியா, இந்திய தேசத்தின் ஒருமைப்பட்டை வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரின் வழியிலும், தலித் தலைவர் பி.ஆர். அம்பேத்கரின் வழியிலும் கட்டமைக்கப்படும்! என்று பேசினார் இந்த்ரேஷ் குமார்.