நெட் நியூட்ராலிடி எனப்படும் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த இணைய சமநிலைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காகூட இணைய சமநிலைப் பயன்பாட்டில் பாதுகாப்பு நிலையை மேற்கொள்ள தட்டுத் தடுமாறி, மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு படி நிலைகளில் இதனை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் உறுதி வாய்ந்த இணைய சமநிலைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நெட் நியூட்ரலிட்டி என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணைய சேவை என்பதுதான்! அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது.
சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக் கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித் தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது. அதன்படி இணையத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கான சம உரிமைக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இதற்காக டிராய் அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறுகையில், ‘இணையதள சேவைகளை முடக்குதல், அதிவேக இணையப் பயன்பாடு அளித்தல் ஆகியவற்றில் பயனர்களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டி வருவதற்கு தடை விதிக்க வகை செய்யும் விதிமுறைகளை டிராய் பரிந்துரை செய்தது. மேலும் புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.’’ என்று கூறினார்.
நெட் நியூட்ராலிடி எனப்படும் இணைய சமநிலைக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதால் இனி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கோர இயலாது.
#NetNeutrality